by Staff Writer 04-12-2021 | 1:29 PM
Colombo (News 1st) மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று (04) முதல் குறித்த காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் நேற்று மின்சார விநியோகம் தடைப்பட்ட போது, நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததாக அவர் கூறினார்.
செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்த குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் சுலக்சன ஜயவர்தன தெரிவித்தார்.
இதனால் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
மின்வெட்டு நாசகார செயல் அல்லவென எதிர்பார்ப்பதாக அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், மின்வெட்டுக்கான உரிய காரணத்தை அறிவதற்காக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.