by Staff Writer 26-09-2021 | 1:00 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் நாளை (27) முதல் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆதார வைத்தியசாலைகள், மாகாண வைத்தியசாலைகள் மற்றும் போதனா வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜயசூரிய குறிப்பிட்டார்.
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கே நாளை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.
அவ்வாறான சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர், பெற்றோர்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
விசேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ பரசோதனைக்கு பின்னரே தடுப்பூசி ஏற்றுவதற்கு சிறார்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் இன்று (26) காலை 09 மணி தொடக்கம் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
எவ்வித நோய்களும் அற்ற சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளையும் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.