நாட்டை மேலும் சில தினங்களுக்கு முடக்குமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்

by Bella Dalima 26-08-2021 | 7:06 PM
Colombo (News 1st) நாட்டை மேலும் சில தினங்களுக்கு முடக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கி தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தினார். USAID நிர்வாகி சமந்தா பவரிடம் (Samantha Power) இலங்கைக்கு COVID தடுப்பூசி வழங்குமாறு கோரிய மங்கள சமரவீர COVID தொற்றுக்கு பலியானதை ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்தார். மேலும், கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைவர் ராஜமகேந்திரன், டி.எஸ்.விஜேசிங்க, சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் தனக்கு நெருக்கமான ஆறு பேரும் COVID தொற்றுக்கு பலியானதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் போதாது எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய மேலும் இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், தற்போதுள்ள முடக்க நிலைக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் உடனடியாக IMF அமைப்புடன் கலந்துரையாடி பொருளாதாரத்திற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.