07 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு 

பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு 

by Staff Writer 28-07-2021 | 1:21 PM
Colombo (News 1st) தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 07 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் விசேட தெரிவுக்குழு இன்று (28) பிற்பகல் 02 மணிக்கு கூடவுள்ளதாக, பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் செயலாளர்  பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர குறிப்பிட்டார். அகில இலங்கை தமிழர் மகா சபை, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, சிங்க தேசிய முன்னணி, சமத்துவக் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியன தமது வருகையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், மௌபிம ஜனதா கட்சி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகியன வருகையை உறுதிப்படுத்தவில்லை என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி தெரிவுக்குழு கூடிய போது, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான PAFFREL அமைப்பு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கடந்த ஏப்ரல் மாதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்டது.