X-Press Pearl விசாரணைகளை விரைவுபடுத்தி அறிக்கையிடுவதாக சட்டமா அதிபர் அறிவிப்பு

by Staff Writer 15-07-2021 | 2:11 PM
Colombo (News 1st) X-Press Pearl கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவாக நிறைவுசெய்து, அதன் முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று (15)  அறிவித்தார். விசாரணை அதிகாரிகளால் கோரப்பட்ட கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்திடம் காணப்பட்ட அனைத்து கணினி தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். அதற்கமைய, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டார். X-Press Pearl கப்பலின் கெப்டன், கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிலையத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட நிறுவனத்தின் பிரதம அதிகாரிகள் சிலரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.