மன்னாரில் கரையொதுங்கிய நாட்டுப் படகு: தமிழக மீனவர்களுடையது என சந்தேகம்

by Staff Writer 13-07-2021 | 7:19 PM
Colombo (News 1st) மன்னார் - சவுத்பார் கடற்கரையில் நாட்டுப் படகொன்று கரையொதுங்கியிருந்ததை இன்று அதிகாலை அப்பகுதி மீனவர்கள் கண்ணுற்றுள்ளனர். தமிழகத்தின் இராமேஷ்வரம் பகுதியில் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலையால் அள்ளுண்டு செல்லப்பட்ட படகே இவ்வாறு கரையொதுங்கியிருக்கலாம் என இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டனர். மிகவும் சேதமடைந்த நிலையில் குறித்த படகு கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். ஏற்கனவே தென்கடல் பகுதியிலும் இவ்வாறான படகொன்று கரையொதுங்கியிருந்ததாக இலங்கை கடற்படையினர் சுட்டிக்காட்டினர். புத்தளம் - முந்தல், சின்னப்பாடு கடற்கரையோரப் பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இரண்டு படகுகள் கரையொதுங்கியிருந்தன. கரையொதுங்கிய படகுகள் இந்திய படகுகள் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவற்றின் இயந்திரங்கள் அண்மையில் அகற்றப்பட்டிருந்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே, இலங்கை கடற்படையினரால் மன்னார் - கிராஞ்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கு, இருநாட்டு அரசாங்கங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.