SLvIND: போட்டிகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

by Staff Writer 10-07-2021 | 6:15 PM
Colombo (News 1st) இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகளை உள்ளடக்கிய சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன. இலங்கை தேசிய அணி வீரர்களும், ஊழியர்களும் சுகாதார தேவைப்பாடுகளைப் பூரணப்படுத்துவதற்கு வேண்டிய கால அவகாசத்தை வழங்குவதற்காக இந்தத் தொடர்கள் பிற்போடப்பட்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளினதும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளுக்கிடையில் நடைபெற்றிருந்த நிலையில், இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இம்மாதம் 13 ஆம் திகதி இந்தத் தொடரை ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.