டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

by Staff Writer 09-07-2021 | 2:35 PM
Colombo (News 1st) டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம் தெரிவித்தது. கடந்த மூன்று வாரங்களில், வாரம் ஒன்றிற்கு 700 நோயாளர்கள் என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார். பருவப்பெயர்ச்சி மாற்றம் ஏற்படுகின்ற காலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, தற்போது பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் எச்சரிக்கை விடுத்தார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 9,361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகளவானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது. அதற்கமைய, நாட்டில் 10 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹிமாலி ஹேரத் தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களே டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. டெங்கு நுளம்பு பரவுவதனை ஒழிப்பதற்கு தேவையான கிராம மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார்.