மட்டக்களப்பிற்கு பயணித்த 3 பஸ்கள் மடக்கிப்பிடிப்பு

பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 3 பஸ்கள் மடக்கிப் பிடிப்பு

by Staff Writer 02-07-2021 | 3:27 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 03 பஸ்கள் கரடியனாறு பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக மூன்று பஸ்களிலும் 49 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. மூன்று பஸ்களினதும் சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது முன்னெடுக்கப்பட்ட திடீர் கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் கூறினர். மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பிலிருந்து குறித்த மூன்று பஸ்களும் மட்டக்களப்பு நோக்கி பயணித்துள்ளன. மூன்று பஸ்களும் இன்று அதிகாலை 3.30 அளவில் கரடியனாறு பகுதியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.