இன்றிரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

by Staff Writer 21-05-2021 | 4:45 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான பகுதிகளில் நாளை (22) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திருகோணமலைக்கு அப்பால் வடக்கு அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழமுக்க நிலை எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக மாற்றமடையும் எனவும் இதனால் நாட்டிற்கு நேரடியான தாக்கங்கள் குறைவாகவே காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டார்.