by Bella Dalima 20-05-2021 | 5:46 PM
Colombo (News 1st) தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி எனும் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த முகாமில் 250 குடியிருப்புகளில் 800-க்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால் மக்கள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.
முகாமில் வசதித்து வருகின்ற பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள். இதனால், தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் இவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
800-க்கும் அதிகமானவர்கள் வசித்து வரும் முகாமில் 7 பொது கழிவறைகள் மத்திரமே உள்ளதாகவும் குறைந்த எண்ணிக்கையிலான பொது நீர் குழாய்கள் உள்ளதால், மக்கள் வருடம் முழுவதும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் த ஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது குடிநீர் குழாய், கூடுதல் கழிவறை மற்றும் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என பரமத்தி முகாமில் வசிக்கும் இலங்கை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.