by Staff Writer 26-03-2021 | 8:53 PM
Colombo (News 1st) அனுராதபுரம் - மஹவிலச்சிய பகுதிக்கு இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
மஹவிலச்சிய கிராமத்தை அபிவிருத்தி செய்ய ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் மக்கள் சக்திக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று செய்துகொள்ளப்பட்டது.
மஹவிலச்சிய கிராமத்தில் 6 செயற்றிட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கொள்ளுப்பிட்டியில் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.
ஹட்டன் நஷனல் வங்கி முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை பரிமாற்றிக்கொண்டனர்.
மஹவிலச்சிய மக்கள் அரண் அமைப்பின் பிரதிநிதிகளும் HNB கழகத்தின் விசேட விருந்தினர்களும், மக்கள் சக்தி உறுப்பினர்களும் இந்த தருணத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
மஹவிலச்சிய கிராமத்திற்கான குடிநீர், குளம் புனரமைப்பு, நுழைவாயில் வீதியை செப்பனிடல், பாடசாலைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், ரஜமஹா விகாரை புனரமைப்பு மற்றும் பொதுமண்டப நிர்மாணம் ஆகிய ஆறு வேலைத்திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.