இந்திய மீனவர்களில் 40 பேர் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 40 பேர் விடுவிப்பு

by Staff Writer 26-03-2021 | 7:24 PM
Colombo (News 1st) நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 40 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 படகுகளில் நான்கு படகுகளை விடுவித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய மீனவர்களின் 05 படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (25) கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். இதனிடையே இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.