by Staff Writer 08-03-2021 | 8:18 PM
Colombo (News 1st) இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதலை பூஜ்ஜிய வரைபுத் தீர்மானத்தில் உள்ளடக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மேன்முறையீடு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பூஜ்ஜிய வரைபு வௌியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த வரைபு பாதுகாப்பு பிரிவினால் புரியப்பட்ட கொடூர குற்றங்களின் பொருட்டான சர்வதேச பொறுப்புக்கூறலை பூர்த்தி செய்யவில்லை என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்டுள்ள இனப் படுகொலை ஆகியவற்றிக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டியமையை பூஜ்ஜிய வரைபில் உள்ளடக்குவதற்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தமிழர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியிருந்ததாகவும் அதனை வலுச்சேர்க்கும் முகமாகவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு தவறினால் குற்றங்களை புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.