பெண் கொலை ; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்; விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

by Staff Writer 04-03-2021 | 2:47 PM
Colombo (News 1st) கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் தலையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி - குருவிட்டை - தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளமை நேற்று (03) உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சந்தேகநபரான 52 வயதுடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஹங்வெல்ல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 28 ஆம் திகதி இரவு சென்ற சந்தேகநபரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், கடந்த முதலாம் திகதி காலை நகரிலுள்ள கடையொன்றில் பயணப் பையை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹங்வெல்ல நகரிலேயே கத்தியையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்த சந்தேகநபரான உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த அறையில் படிந்திருந்த இரத்தக் கறை அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் தலை காணப்படாமையால், மரபணு (DNA) பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்கொலை செய்துகொண்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (04) நடாத்தப்படவுள்ளது.