தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

by Bella Dalima 21-01-2021 | 10:32 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் மத்திய நிலையமும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். எனினும், பேரணியாக செல்வதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்த போது முறுகல் நிலை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இதனையடுத்து, வீதியோரமாக நின்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு போராட்டக்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணித்தியாலமளவில் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், பின்னர் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றுள்ளனர். சுகாதார வழிமுறைகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.