கொரோனா தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் நாட்டிற்கு கொண்டுவர முடியும்: சன்ன ஜயசுமன தெரிவிப்பு

by Staff Writer 16-01-2021 | 8:21 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட COVID தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நேற்று (15) தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் அவசர அனுமதி கோரியிருந்தது. AstraZeneca மற்றும் Pfizer-BioNTech தடுப்பூசியை அடுத்த மாதம் இந்நாட்டு மக்களுக்கு ஏற்ற திட்டமிட்டுள்ளதாக COVID தடுப்பு நிர்வாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இதற்கு முன்பு கூறியிருந்தார். AstraZeneca மற்றும் Pfizer-BioNTech தடுப்பூசிக்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் எதிர்வரும் சில நாட்களுக்குள் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் அனுமதி கோர எதிர்பார்த்துள்ளதாக ஔடதங்கள் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா கட்டுப்பாட்டிற்கான தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் என அவர் கூறினார். Sputnik V தடுப்பூசி மாத்திரமல்லாது, AstraZeneca, Pfizer-BioNTech தடுப்பூசி பதிவிற்காகவும் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.