சீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு

by Staff Writer 13-01-2021 | 8:04 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மக்கள் விடுதலை முன்னணி செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி ஒரு கிலோகிராமிற்கு அரசாங்கம் விதித்திருந்த 50 ரூபா இறக்குமதி வரி 25 சதமாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 2 ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் 20,000 மெட்ரிக் தொன் சீனியையும் நவம்பர் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் சீனியையும் இறக்குமதி செய்ததுடன், இறுதியில் அவர் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்துள்ளார். இதனிடையே, அரசாங்கம் ஒரு கிலோகிராம் சீனியின் அதிகபட்ச சில்லறை விலையை 85 ரூபாவாக நிர்ணயித்ததுடன், இதனால் 50 ரூபா இறக்குமதி வரியை செலுத்தி சீனியை இறக்குமதி செய்த வர்த்தகர்களால் அந்த விலைக்கு சீனியை விற்பனை செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, ஒக்டோபர் 27 ஆம் திகதி சீனி இறக்குமதிக்கான வரியை மீண்டும் 40 ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. வர்த்தக சந்தையின் வரியில் மாற்றம் ஏற்படுத்தி ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் அதனை திரும்ப மாற்ற முடியாதென்பதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர்கள் மூலம் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் சீனியை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை கொண்டுவரப்பட்ட சீனியை 25 சதத்திற்கு விடுவிக்க இடமளிக்கப்படாத அதேவேளை, நவம்பர் 22 ஆம் திகதி அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் 25 சத வரியுடன் இறக்குமதி செய்யப்பட்ட சீனி விநியோகிக்கப்பட்டது. அதனூடாக 25 சத வரிக்கு சீனியை இறக்குமதி செய்த வர்த்தகருக்கு பெருத்த இலாபம் கிட்டியதுடன், மக்கள் விடுதலை முன்னணியின் முறைப்பாட்டிற்கு அமைவாக அந்த இலாபம் அண்ணளவாக 1000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.