by Staff Writer 13-01-2021 | 4:27 PM
Colombo (News 1st) வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையின் கீழ் இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் இன்று மீனவர்கள் அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் நான்கு படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அரசுடைமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் காரைநகர் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு தடவைகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.