180 சுற்றுலா பயணிகளுடனான விமானம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தது 

by Staff Writer 28-12-2020 | 2:51 PM
Colombo (News 1st) யுக்ரைனிலிருந்து 180 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. யுக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விசேட விமானம் இன்று (28) பகல் 2.07 மணிக்கு மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் செயற்றிட்டத்தின் கீழ் இவர்கள் வருகை தந்துள்ளனர். நாட்டை வந்தடைந்துள்ள சுற்றுலாப் பயணிகளை பெந்தோட்டை மற்றும் கொக்கல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதாக ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார். ஹோட்டல்களில் தங்கவைக்கப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு 07 நாட்களில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். PCR பரிசோதனையின் முடிவுகளின் பிரகாரம், நாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள் சிலவற்றிற்கு இவர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்த திட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய நாட்டிலுள்ள ஏனைய விமான நிலையங்களையும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.