பேச்சுவார்த்தையின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் மெனிங் சந்தை வர்த்தகர்கள்

by Staff Writer 11-12-2020 | 9:08 PM
Colombo (News 1st) புறக்கோட்டை மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றப்பட்டுள்ளமையால் குறித்த காணி வெறுமையாகியுள்ளது. அப்பகுதியில் முதலீட்டு திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் நேற்று (10) முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். பேலியகொடைக்கு தமது வர்த்தகத் தொகுதி மாற்றப்பட்டுள்ளமையால் தாம் பல்வேறு அசௌகரியங்களை அனுபவிப்பதாகத் தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வர்த்தகர் ஒருவருக்கு ஒரு வர்த்தக நிலையத்தை வழங்குவதற்கு பதிலாக, இரு வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நிலையம் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நகர அபிவிருத்தி அதிகாரிகள் 10 பேருடன் இன்று மாலை மேற்கொண்ட கலந்துரையாடலின் நிறைவில் தாம் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.