நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் வனுஷியின் கன்னி உரை

நியூஸிலாந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான வனுஷியின் கன்னி உரை 

by Staff Writer 03-12-2020 | 10:27 PM
Colombo (News 1st) இலங்கையில் பிறந்த முதலாவது நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் வனுஷி வோல்டர்ஸ் தனது கன்னி உரையை பாராளுமன்றத்தில் நேற்று நிகழ்த்தியுள்ளார். மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது என்ற தமது உரையின் சுருக்கத்தை தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கியுள்ளார். வனுஷி வோல்டர்ஸ் 1981 ஆம் ஆண்டில் இலங்கையில் பிறந்தார். பின்னர் நியூசிலாந்துக்கு புகலிடம் பெற்றுச்சென்ற அவருக்கு தற்போது 38 வயதாகின்றது. இம்முறை ஒக்லாண்டின் அப்பர் ஹாபர் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட அவர் நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்.
ஆயுபோவன், வணக்கம்! நீங்கள் துயிலெழுவது போன்றதொரு சந்தர்ப்பம், அது ஒவ்வொரு நாளும் இடம்பெறுவதொன்றல்ல ஆனால் அந்த காலைப்பொழுதில் ஏதோவொரு முக்கியமான விடயம் உங்கள் வாழ்வில் மாறியிருக்கும். நீங்கள் துயிலெழுந்த பின்னர் சொற்ப ​நேரத்தில் உங்களுக்கு புதியதோர் அடையாளம் கிடைக்கலாம். தேர்தலுக்கு அடுத்த காலைப்பொழுது எனக்கு அப்படித்தான் அமைந்தது. அப்பர் ஹாபர் பிராந்தியத்துக்கான ஆசனத்தை வெற்றிகொண்ட முதலாவது தொழிற்கட்சி உறுப்பினராக என்னை தெரிவு செய்த மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் செயற்படுவேன். முதலாவது இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புக்கு என்னால் உரிமை கோர முடியாது. எனினும் இலங்கையில் பிறந்த முதலாவது நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் நான் தான். பெறுமதிகளின் அடிப்படையில் இயங்கும் தொழிற்கட்சியில் இருந்து சேவையில் இணைந்துகொள்வது தொடர்பில் அதிகம் மகிழ்ச்சியடைகின்றேன். மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது. இந்த ஆட்சியில் எமக்கு பல நன்மைகளை அளிக்கப்போகும் பாராளுமன்றத்தில் காணப்படும் பன்முகத்தன்மையை அவதானிக்கின்றேன். அழகான பல வேற்றுமைகள் காணப்படுகின்றன. மனித வாழ்வில் நாம் எத்தனையோ குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்
என நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் வனுஷி வோல்டர்ஸ் உரையாற்றியுள்ளார். வனுஷி வோல்டர்ஸ் உள்ளிட்ட தொழிற்கட்சியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தமது கன்னி உரையை நிகழ்த்தியிருந்தனர்.