பண்ணையாளர்களை பாதுகாக்குமாறு கஜேந்திரகுமார் கடிதம்

பண்ணையாளர்களை பாதுகாக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு கடிதம்

by Staff Writer 19-11-2020 | 7:25 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மயிலத்தைமடு, பெரியமாதவனை மேயச்சல் தரைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சோளப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையின விவசாயிகளால் பண்ணையாளர்களுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர் பொலிசாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும் மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்திலும் பண்ணையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.