மைக் பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 27-10-2020 | 12:14 PM
Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்ய வேண்டாம் என வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். சர்வாதிகார முறையிலான 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, ஒரு நாள் நிறைவடைந்த பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஆசிய வலையத்தை வழிநடத்துவதற்கான திட்டத்துடன் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இந்த விஜயம் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.