கொலை அச்சுறுத்தல்: 2 ஆவது சந்தேகநபர் பொடி லெசி

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பொடி லெசி பெயரிடப்பட்டுள்ளார்

by Staff Writer 17-09-2020 | 4:06 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார். காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனுவெலவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பொடி லெசி சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா முன்வைத்த நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய, பொடி லெசி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறைச்சாலைக்கு சென்று பொடி லெசியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பிரதம நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, சந்தேகநபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் பொடி லெசி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதேவேளை, காலி நீதிமன்ற கட்டடத் தொகுதியை சூழ பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான கொஸ்கொட தாரக என்றழைக்கப்படும் தர்மகீர்த்திகே தாரக பெரேரா விஜேசேகர என்பவரும் கொலை அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.