Colombo (News 1st) ரஷ்யாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த 3 பல்கலைக்கழகங்கள் தவறுதலாகவே மருத்துவ சபையின் இணையத்தளத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
குழுவொன்றே அதனைத் தீர்மானிக்கும். இந்த முறை மூன்று பல்கலைக்கழங்கள் அல்ல 7 பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அறிக்கையிடப்பட்டது. அந்த நாடா இந்த நாடா என்று நாம் அறிக்கையில் பார்க்கவில்லை. வேறு பிரச்சினைகள் ஏற்படுமா என்றும் பார்க்கவில்லை. அந்த அறிக்கையின்படியே தீர்மானம் எடுத்தோம். அதன் பின்னர் அவ்வாறு வெறுமனே தீர்மானம் எடுக்க முடியாது, குழுவினாலே தீர்மானம் எடுக்க வேண்டும், குழு தீர்மானம் எடுத்து அது மீண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் பேரவைக் கூட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், அதன் பின்னரே அமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும். இறுதி தீர்மானத்தை அமைச்சரே எடுக்க வேண்டும். நாம் செயற்படும் பேரவையினால் இங்கு அந்த செயற்பாடு இடம்பெறவில்லை. இதனை நீக்கினால் போதுமானது என தவறுதலாக ஒருவர் நினைத்து இணையத்தளத்தில் இருந்து பெயர்கள் நீக்கியுள்ளார். அதனை நீக்கிவிட்டு இந்த விடயங்களை செய்துள்ளார். அதனை அறிந்து கொண்டதுடன் நாம் மீண்டும் கூட்டத்தை நடத்தினோம். நீக்கப்பட்ட பெயர்கள் மீண்டும் தகுதியானதா இல்லையா என்று மீண்டும் ஆராய வேண்டி ஏற்பட்டது. இணையத்தளத்தில் இருந்து பெயர்களை நீக்கிய போது தவறு ஏற்பட்டுள்ளது
என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா கூறியுள்ளார்.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் இன்று (13) இவ்வாறு கூறினாலும் மருத்துவ சபையின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், ஜுலை 26 ஆம் திகதி நடைபெற்ற குழு கூட்டத்தை அடுத்து ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம், பிரொகொவ்ஃப் தேசிய ஆராய்ச்சி மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ட்வெர் அரச மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியன இலங்கை மருத்துவ சபையின் அனுமதியுடன் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது