ஆதரவு பேரணியில் ஈடுபட்ட படகுகள் நீரில் மூழ்கின

ட்ரம்புக்கான ஆதரவு பேரணியில் ஈடுபட்ட ஏராளமான படகுகள் வாவியில் மூழ்கின

by Staff Writer 06-09-2020 | 5:38 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் டெக்ஸாஸ் வாவியொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக ​பேரணி சென்ற ஏராளமான படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு திரட்டும் முகமாக இந்தப் படகுப் பேரணி நடத்தப்பட்டிருந்தது. டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகர் ஒஸ்ரினுக்கு அருகாகவுள்ள Travis வாவியில், ஏராளமான படகுகள் மிகவும் நெருக்கமாக பயணித்தமையால் வாவி நீர் சேறாகியமை இந்த விபத்துக்கான காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் மூழ்கிய படகுகளிலிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் தொடர்பான உடனடி தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட, ட்ரம்புக்கு ஆதரவான இந்தப் பேரணியில் 2,600 இற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.