கொள்ளையர்களின் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

பூகொட ஆடை வர்த்தக நிலையத்தில் கொள்ளையிட வந்தவர்களின் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

by Staff Writer 13-08-2020 | 7:35 PM
Colombo (News 1st) பூகொடவில் ஆடை வர்த்தக நிலையமொன்றை கொள்ளையிட வந்ததாக சந்தேகிக்கப்படும் சிலர் பயணித்த வேன் ஒன்றின் மீது மீரிகம D.S. சேனாநாயக்க கல்லூரிக்கு அருகில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனையும் பொருட்படுத்தாமல் வேனில் சென்றவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஆடை வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்த சிலர், ஆடைகளை மூடையில் நிரப்பி, அதனை குறித்த வேனுக்கு கொண்டு செல்லும் போது அருகில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த சிலர் சத்தமிட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் ஆடை நிரப்பிய மூட்டைகளை விட்டுவிட்டுச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதன் பின்னர், பூகொட பொலிஸார் அந்த வேனை பின்தொடர்ந்துள்ளதுடன், வேன் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர். தகவல் அறிந்த மீரிகம பொலிஸார் குறித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச்சென்ற வேனிலிருந்து தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.