பம்பரக்கல குடியிருப்பில் தீ; 24 வீடுகள் தீக்கிரை

பம்பரக்கல குடியிருப்பில் பரவிய தீயினால் 24 வீடுகள் தீக்கிரை

by Staff Writer 11-08-2020 | 10:21 AM
Colombo (News 1st) லிந்துலை - பம்பரக்கல மத்திய பிரிவிலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 24 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நேற்றிரவு (10) 10 மணியவில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீயினால் லயன் தொகுதியில் அமைந்துள்ள 24 குடியிருப்புகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்தினால் 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். தீ விபத்தினால் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். வீடுகளை இழந்த மக்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளன. மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.