by Staff Writer 16-07-2020 | 6:59 PM
Colombo (News 1st) வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் சந்தேகநபர்களான அப்போதைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோர் தொடர்பில் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு கொழும்பு மேலதிக நீவான் கலனி பெரேரா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முறைப்பாட்டாளர்கள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க ஆஜரானார்.
பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரிழந்துள்ளதாகவும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதவான், வழக்கை நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் அன்றைய தினம் அறிக்கையிடுமாறு உத்தரவிட்டார்.
நாரஹேன்பிட்டி, ஷாலிகா விளையாட்டரங்கிற்கு அருகில் காரினுள் உயிரிழந்திருந்த வசீம் தாஜுதீனின் சடலம் 2012 மே 17 ஆம் திகதி மீட்கப்பட்டது.