Colombo (News 1st) மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கொழும்பில் நேற்று (07) மாலை நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின்போது தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை வழங்குமாறு அரசாங்கம் கோருகிறது. 13 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தங்களை மாற்றுவதாக நேரடியாகக் கூறுகின்றனர். அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார், என தயான் ஜயதிலக்க எச்சரித்தார்.
சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும் எனவும் மீண்டும் வடக்கு, தெற்கு பிரச்சினை உருவாகும் எனவும் அவர் எதிர்வுகூறினார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் மூலம் வந்த விடயமாகும். அவ்வாறாயின், அயல்நாட்டுடன் முரண்பட வேண்டியேற்படும். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவிற்கு வாக்குறுதியளிக்கப்பட்டே, யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. அது மாத்திரமல்ல 13+ என்றும் சில சந்தர்ப்பங்களில் கூறினர். 13-ஐ அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்புவோம் என்றும் கூறினர். அவ்வாறு எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு கூறுகின்றனர்
என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டார்.