காலி முகத்திடலில் ரஷ்யப் பெண் துன்புறுத்தல்: ஐவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 07-07-2020 | 8:48 PM
Colombo (News 1st) இலங்கையில் ரஷ்யப் பெண் ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் 5 சந்தேகநபர்களும் இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் காலி முகத்திடலில் குறித்த ரஷ்யப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக அன்றிரவே அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5 சந்தேகநபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மத்தியில் பிரதான சந்தேகநபர் இருந்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ரஷ்யப் பெண் துன்புறுத்தப்படும் வீடியோ காட்சி நேற்றிரவு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேகநபர்கள் கொழும்பைச் சூழவுள்ளவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.