by Bella Dalima 01-07-2020 | 9:43 PM
Colombo (News 1st) உலக வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளராக Chiyo Kanda நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ள சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை புதிய வதிவிட முகாமையாளர் Chiyo Kanda மேற்பார்வை செய்வார் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளராக Faris Hadad- Zervos நியமிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அவரினால் நேபாளத்தின் கத்மண்டுவில் உள்ள உலக வங்கி அலுவலகத்தில் இருந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு உலக வங்கியினால் வழங்கப்படும் 5.5 பில்லியன் டொலர் உதவித் திட்டமும் அவரினால் கண்காணிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
COVID-19 வைரஸினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே உலக வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளராக Chiyo Kanda நியமிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை COVID-19-ஐ சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரஜையான Chiyo Kanda 1994 ஆம் ஆண்டு உலக வங்கியில் இணைந்து கொண்டார்.
அவர் உலக வங்கியின் ஆபிரிக்க வலய சிரேஷ்ட பொருளாதார நிபுணர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கையில் நிரந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக, அனைத்து தரப்பினருடனும் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாக Chiyo Kanda விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.