கோப்புகளை திருப்பி அனுப்பினார் சட்ட மா அதிபர்

ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணை நிறைவு செய்யப்படாத கோப்புகளை திருப்பி அனுப்பினார் சட்ட மா அதிபர்

by Staff Writer 26-06-2020 | 7:17 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்தான விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 40 கோப்புகளை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். விசாரணைகளை உரிய முறையில் நிறைவு செய்யுமாறும் சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைக் கோப்புகள் சட்ட ஆலோசனைக்காக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் இருந்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த கோப்புகள் அனுப்பப்பட்டிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவற்றின் விசாரணைகள் நிறைவு செய்யப்படவில்லையென சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகள் முழுமையாக நிறைவு செய்யப்படாததால், சந்தேகநபர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.