நடிகர் விஜய்க்கு இன்று 46ஆவது பிறந்தநாள்...

தளபதிக்கு இன்று 46ஆவது பிறந்தநாள் - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

by Fazlullah Mubarak 22-06-2020 | 11:47 AM
1974 இல் பிறந்த நடிகர் விஜய் இன்று (22) தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். ''இளைய தளபதி'' யாக இருந்து பின் வசூல் மன்னனாக ''தளபதி'' என்று ரசிகர்களால் நாமம் சூட்டப்பட்ட நடிகர் விஜய் தொடர்பில் சில குறிப்புக்களை NEWS 1ST நேயர்களுக்காக தருகிறோம். இவரது இயற்பெயர், ஜோசப் விஜய். ஆரம்பத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழ் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். அவரது படங்கள் இதுவரை 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் வௌியாகியுள்ளன. புரட்சிக் கலைஞர் கெப்டன் விஜயகாந்த்துடன் முதல்தடவையாக அவர் நடித்த போது திரையுலகில் அவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது. அவருக்கு விலாசம் கொடுத்ததும் நடிகர் புரட்சிக் கலைஞர் கெப்டன் விஜயகாந்த் எனில் அது மிகையல்ல. விஜய் தனது 10ஆவது வயதில் வெற்றி  (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படத்திலும் குழந்தை நடிகராக அவர் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆவது வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு  (1992) படத்தில் முதல்தடவையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக  (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக  அரச திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா  விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய அரபு இராச்சியத்தின்  திரைப்பட விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஒரு பின்னணிப் பாடகராக விஜய் 32 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த படக் கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. இவரது தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி. விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கையொருவர் இருந்தார். அவர் இரண்டாவது வயதில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும் குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத் தனத்துடனும் இருந்தார் என கூறப்படுகின்றது. இவரது தங்கை வித்யாவின் கதை 2005ஆம் ஆண்டுப் படமான சுக்ரனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

 

2002 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உதயா, தாமதமாகி 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதியாக வெளியிடப்பட்டது. தெலுங்கு படமான ஒக்கடுவின் மறு ஆக்கமான கில்லி 2004 இல் வெளியானது. தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. எஸ். தரணி இயக்கிய இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்தார். இப்படத்தில் இவருடன் த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்தனர். தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் 50 கோடி (இந்திய ரூபாய்) க்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.  இதன்பின்னர் இவர் ரமணா மாதேஷ் இயக்கிய மதுர திரைப்படத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் நடித்தார். பின் சுக்ரன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஜோன் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசாவுடன் நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் அசினுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்தார். விஜயின் அடுத்த படமான ஆதி இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்து ரமணா இயக்கத்தில் 2006 இல் வெளியானது. 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், விஜய் போக்கிரி படத்தில் நடித்தார். இது தெலுங்குப் படமான போக்கிரியின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தை பிரபுதேவா இயக்கினார். இது 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். இந்தப் படத்தில் விஜயின் கதாபாத்திரம், விமர்சகர்களால் நன்றாகப் பாராட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் நடித்தார். இதில் இவர் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடித்தார். இந்த படம் மிதமான வசூல் செய்தது. 2008 இல், இவர் மீண்டும் தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்தார். 2009 இல், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார். சமகாலத்தில் அதிகம் பேசப்படும் படங்கள் வரிசையில்,  பைரவா , பரதனால் இயக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தார். இப்படம் ஜனவரி 2017 இல் வெளியிடப்பட்டது. இவரது அடுத்த படம் மெர்சல், அட்லீயால் இயக்கப்பட்டது. சமந்தா ருத் பிரபுகாஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட்டது. விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாக மெர்சல் பதிவானது.  இவரது படங்களில் 250 கோடி(இந்திய ரூபாய்)க்கும் அதிகமான வசூல் செய்த முதல் படம் இதுவாகும். மெர்சல் திரைப்பட கதாபாத்திரத்திற்காக விஜய் 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். காவலனுக்கு (2011) பிறகு சீனாவில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது படம் மெர்சல் ஆகும்.

 

மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவரது அடுத்த படமான சர்கார், . ஆர். முருகதாஸால் இயக்கப்பட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த படமாகும். இது 2018 தீபாவளிக்கு வெளியானது. தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...