Colombo (News 1st) இந்தோனேஷியாவின் பாலி தீவில், கிணறொன்றில் வீழ்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
29 வயதுடைய ஜாகோப் ரொபேட்ஸ் (Jacob Roberts) என்பவர் நாயினால் துரத்திச் செல்லப்பட்ட போது, 4 மீற்றர் ஆழமான கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.
இதன்போது அவருடைய கால் ஒன்று முறிந்துள்ளது.
அவர் வீழ்ந்த கிணறு சிறிதளவு நீருடன், உலர்ந்த நிலையில் காணப்பட்டாலும் கால் உடைந்த காரணத்தினால் அவரால் வௌியேற முடியாமற்போனதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்நிலையில், ஜாகோப் ரொபேட்ஸ் கூக்குரலிட்டதை செவிமடுத்த உள்ளூர்வாசி ஒருவர், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து மீட்புக் குழுவினரால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.