இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

by Staff Writer 27-05-2020 | 7:31 PM
 Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். கோபால் பாக்லே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமரின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. COVID-19 ஒழிப்பிற்காக இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டுதல்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் சாரும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு மற்றும் பொருளாதார சிக்கல்கள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் மிகவும் சிறந்த புரிதலுடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்படுவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.