COVID-19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 06-05-2020 | 7:23 PM
Colombo (News 1st) அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் இன்று நடைபெற்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் இம்முறை அரச வெசாக் விழா நிகழ்வுகள் நடைபெற்றன. இம்முறை வெசாக் பூரணையை குறிக்கும் வகையில் அமைச்சர் பந்துல குணவர்தன நான்கு தபால் முத்திரைகளை வௌியிட்டு வைத்தார். பாரம்பரிய முறைப்படி புனித பூமி பட்டோலை, ஹொரணை ஒலுகொடுவ ரஜமகா விகாரை சார்பாக பிரதமரால் வழங்கப்பட்டது. இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
எமது பௌத்த சம்பிரதாயத்தின் படி ஒருவரது வயது வெசாக் பூரணை எண்ணிக்கைக்கு அமைவாகவே கணிக்கப்பட்டது. எதிர்காலம் தொடர்பிலும் வெசாக் பூரணையை அடிப்படையாக வைத்தே கூறப்பட்டது. பௌத்த தர்மத்தை பாதுகாக்கும் அரசாங்கம் எப்போது வரும் என அன்று என்னிடம் கேட்டபோது நான் வெசாக் பூரணை எண்ணிக்கையை தெரிவித்து பதிலளித்தேன். தற்போது அந்த பூரணை வந்துள்ளது. புத்த பகவானின் தர்மத்தை உணர்ந்தவர்கள், அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த அழிவுகளைக் கண்டு கவலையடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். COVID-19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்