by Staff Writer 22-04-2020 | 6:57 PM
Colombo (News 1st) மக்கள் தற்போது தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் தமது அன்றாட வருமானம் தொடர்பில் கரிசனை செலுத்துவதுமே மக்களின் எதிர்பார்ப்பாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியைக் கையாளும் அதிகாரம் இந்த மாதத்துடன் ஜனாதிபதியிடம் இருந்து பறிபோகும் நிலையில், அதனை தக்கவைத்துக் கொள்ளவதற்காகவே அரசு முயற்சிப்பதாக தமது அறிக்கையினூடாக இம்ரான் மஹ்ரூப் கூறியுள்ளார்.
விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க அரசு முயற்சிப்பதாகவும், 19 ஆம் திருத்த சட்டத்தின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் தேர்தல் ஒன்று நடத்தி புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பில், சட்ட சிக்கல் உள்ளதாகவும் ஆகவே இது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனையைப் பெறுவது பற்றி ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்த வேண்டும் என முடிவெடுத்ததும் முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும்
முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதும் இதனையே புலப்படுத்துவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.