சுகாதார ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ராகமை, வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 12-04-2020 | 6:28 PM
Colombo (News 1st) ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் முழங்காவில் மற்றும் மன்னாரிலுள்ள கடற்படையின் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். ராகமை போதனா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாஎல - சுதுவெல்ல கிராமத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த சுகாதார ஊழியரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். ஜாஎல - சுதுவெல்ல கிராமத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துவந்த 28 பேரை கடந்த 9ஆம் திகதி கடற்படையின் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர். இவர்களில் அறுவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொழும்பு வடக்கு போதனா ​வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுதுவெல்லயில் அடையாளம் காணப்பட்ட Covid-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.