அவசர சிகிச்சைப் பிரிவில் போரிஸ் ஜோன்ஸன்

அவசர சிகிச்சைப் பிரிவில் போரிஸ் ஜோன்ஸன்

by Bella Dalima 07-04-2020 | 7:42 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக அவருக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. முற்பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதமர் ஜோன்ஸன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் சுவாசிப்பதில் அவருக்குள்ள சிரமங்களையடுத்து, செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவசியம் ஏற்படுமிடத்து, பிரதமரின் கடமைகளை ஆற்றுமாறு பிரித்தானிய வௌிவிவகார செயலாளர் டொமினிக் ராப் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் உடல்நிலை தொடர்பில், மகாராணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரதமர் போரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரச தலைவர்கள் பலரும் பிரார்த்தித்துள்ளனர்.