கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

by Staff Writer 18-03-2020 | 5:24 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் COVID 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று முதல் சுற்றுலா, கேளிக்கை, களியாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் அறிவித்தார். இதனிடையே, இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படும் இலங்கை யாத்திரிகர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர் என COVID 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, COVID 19 தொற்று அறிகுறிகள் காணப்படுவோர் தொடர்பில் கடுமையான விதிமுறைகளின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் மாத்திரமே பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அத்துடன், வரையறை மற்றும் நிபந்தனைகளுடன் 6000 ரூபாவிற்கு குறைந்த கட்டணத்தில் COVID 19 தொற்று தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்க தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறும் அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா வழிகாட்டிகளை தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இரண்டு நோயாளர்களின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் உடம்பில் இருந்து வைரஸ் நீங்கியுள்ளதா என்பது தொடர்பிலான இறுதி அறிக்கை நாளை வெளியாகவுள்ளது. அவர்களில் தொற்றுக்கு உள்ளான இரண்டாவது சுற்றுலா வழிகாட்டியும் அடங்குகின்றார். மோசமாக இருந்த முதலாவது சுற்றுலா வழிகாட்டியின் உடல் நிலை ஒரளவு தேறியுள்ளதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 212 பேர் IDH வைத்தியசாலையிலும், மேலும் சிலர் வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, வெலிகந்த வைத்தியசாலையில் அமைக்கப்படும் கொரோனா விசேட சிகிச்சை பிரிவின் நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த விசேட பிரிவு அமைக்கப்படுகின்றது. கொரோனா நோயாளர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள, IDH வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் அங்கிருந்து மாற்றப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படுகின்றது.