கைது உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி ரவி கருணாநாயக்க ரிட் மனு தாக்கல் 

by Staff Writer 10-03-2020 | 11:05 AM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி, ரவி கருணாநாயக்க இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த எழுத்தாணை மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து, நிறைவுசெய்து கோட்டை நீதவானால் கடந்த 6ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, தம்மை கைது செய்யுமாறு சட்ட மா அதிபரால் பதில்​ பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்ட்டுள்ள உத்தரவையும் இரத்து செய்யுமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இரத்து செய்யுமாறும் ரவி கருணாநாயக்கவின் ரிட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.