ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு 

by Staff Writer 04-03-2020 | 4:24 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா விஜேநாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்பாக இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 2 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 20 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் 6 ஆம் திகதி சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் ரக 10 விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிட்டு நிதித்தூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.