தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம்

முறிகள் மோசடி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

by Staff Writer 18-02-2020 | 8:42 AM
Colombo (News 1st) சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (18) மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ஆங்கில மொழியிலான இருவெட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான மொழிபெயர்ப்புகள் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கவுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை, பாராளுமன்ற அரசாங்க நிதிக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிக் குழுவினூடாக இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய அரசாங்கக் கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் M.A. சுமந்திரன் தலைமையில் இன்று நிதிக் குழு கூடவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. இதுதவிர குறைநிரப்புப் பிரேரணையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .