by Bella Dalima 05-02-2020 | 5:10 PM
Colombo (News 1st) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புதிய பெயர் மாற்றத்தினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
EPRLF எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றுவதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், தமிழர் விடுதலை கூட்டணி, தமிழர் ஐக்கிய முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னரே தமிழர் விடுதலை கூட்டணியாக பதிவு செய்யப்பட்டமையால், அது தொடர்பான அபிப்பிராயத்தினை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தேர்தல்கள் ஆணைக்குழு வினவியிருந்தது.
EPRLF கட்சிக்கு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை வழங்குவது தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி எதிர்ப்பினை தெரிவித்திருந்ததையடுத்து, EPRLF கட்சியின் பெயர் மாற்றம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.
எனினும், மாற்று பெயர்கள் தொடர்பில் பரிந்துரை செய்யுமாறு EPRLF கட்சியிடம் கோரப்பட்டதற்கிணங்க மாற்று பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.