by Fazlullah Mubarak 03-02-2020 | 2:52 PM
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களைக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தில் அறிக்கையிட்டு பிடியாணை உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறும் சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த இருவர் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கவனத்திற்கொண்டு சட்ட மாஅதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நிதித்தூய்தாக்கல் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களின் பேரில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தில் விடயங்களைத் தௌிவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மாஅதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு எயார் பஸ்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.