திருத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அவன்ற் கார்ட் வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 30-01-2020 | 4:53 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தமை உள்ளிட்ட 882 குற்றச்சாட்டுகளின் கீழ் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் இன்று இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக 7513 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. சட்ட மா அதிபரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 19 குற்றச்சாட்டுகளைத் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் கடந்த 17 ஆம் திகதி உத்தரவிட்டது. இதற்கு அமைய சட்ட மா அதிபரால் திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.