by Staff Writer 14-01-2020 | 8:51 PM
Colombo (News 1st) - நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமையால் கிளிநொச்சி, அம்பாறை மாவட்ட விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 65,000 ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொண்டு தற்பொழுது அங்கு நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.
எனினும், நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தரகர்களின் ஊடாக தாம் குறைந்த விலையிலேயே நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாம் விவசாயத்ததை மேற்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட விவசாயிகளும் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, இறக்காமம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.