பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 06-01-2020 | 2:49 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இவர்களின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகளின் நிமித்தம், வாக்குமூலங்களை பதிவுசெய்வதற்கு திகதியொன்றை ஒதுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இதன் பிரகாரம் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் திகதியொன்றை ஒதுக்குவதற்கு இயலும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக மன்றில் அறிவித்துள்ளார். எனினும், முன்னாள் பிரதமர் சாட்சி பதிவுகளுக்கு இதுவரை நாளொன்றை ஒதுக்கவில்லை. மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக சட்டமா அதிபருக்கு பதிலாக மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.